அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயால் மாகாணத்தின் கவர்னர் கவின் நியூசோம் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
கடந்த 3 நாட்களில் அம்மாகாணத்தில் 11 ஆயிரம் இடங்களில் மின்னல் தாக்கியதில் 367 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீயால் வடக்கு கலிபோர்னியா மாகாணம் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளது.
பாலோ, ஆல்டோ, நாபா போன்ற இடங்களில் பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு லட்சம் ஏக்கர் அளவிலான காடுகள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை மொத்தம் 780 சதுர மைல் பரப்பளவில் காடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 33 பேர் காயம் அடைந்தனர்.
175 குடியிருப்பு பகுதிகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. 50,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயினை கட்டுப்படுத்த அரிசோனா, டெக்சாஸ், நெவாடா போன்ற அண்டை மாகாணங்களில் இருந்து 375 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
10 ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.