கொரோனா தொற்று இருப்பதால் நாடு முழுவதும் மதுக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
மேலும் இது போன்ற வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது என வழக்கு போட்டவருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
கவுதம்சிங் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில்; கொரோனா தொற்று இருப்பதால் மதுக்கடைகளில் சமூக விலகலை யாரும் கடைப்பிடிக்கவில்லை.
இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்;
இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இது தொடர்பாக அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும். இது பொதுநல வழக்கு அல்ல.
இந்த மனுவை தாக்கல் செய்த நபருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிப்பதுடன், இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த 7ம் தேதி, திறக்கப்பட்ட மதுக்கடைகள் நீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால், அவற்றை மூடும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சும் விசாரித்து வருகிறது. இந்த மனுவில் இன்றும் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.