TIKTOK, UC BROWSER உள்பட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏற்கெனவே சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
கடந்த 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய – சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது.
சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.
அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
இந்நிலையில் கல்வான் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, டிக்டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர், மெயில் மாஸ்டர், பேரலல் பேஸ், விவோ வீடியோ, கேம் ஸ்கேனர், எம்ஐ கம்யூனிட்டி, வீகோ வீடியோ, வீசாட், கிளப் பேக்டரி, யூகேம் மேக்கப் உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.