BREAKING : விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக புகழேந்தி அறிவிப்பு!!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக அக்கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். 

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன.

இதையொட்டி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை அன்று விருப்பமனு அளித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, வேட்பாளரை தேர்வு செய்யவதற்கான நேர்காணல், திமுக தலைமையமாகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

பொருளாளர் துரைமுருகன், முதன்மைச்செயலாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர் துரைசாமி, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.

இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் நா.புகழேந்தி அறிவிக்கப்பட்டார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற தி.மு.க. வேட்பாளராக, நா. புகழேந்தி போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

திமுகவில் கடந்த 1973ஆம் ஆண்டு முதல் புகழேந்தி பொறுப்புகளை வகித்து வருகிறார். விவசாயத்தை பின்னணியாக கொண்டவர்.

அவரது சொந்த ஊர், விழுப்புரம் வட்டம் அத்தியூர் திருவாதி ஆகும். 66 வயதாகும் புகழேந்திக்கு, ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக புகழேந்தி போட்டியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே