பாபாஜி நாகராஜ் கி.பி. 203, நவம்பர் 30 ஆம் நாள் தமிழ் நாட்டில் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் பரங்கிப்பேட்டை என்னும் ஊரில் வசித்து வந்த நம்பூதிரிப் பிராமணத் தம்பதியருக்கு குழந்தையாக பிறந்தார். கிருஷ்ண பரமாத்மாவின் ஜன்ம நட்சத்திரமான ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று பெயரிடப்பட்டது.

அவருடைய ஐந்து வயதில், ஒரு நாள் பரங்கிப்பேட்டை சிவன் கோவிலில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது அழகால் கவரப்பட்ட வெளிநாட்டு வியாபாரி ஒருவர் குழந்தையை விற்க நினைத்து கடத்திச் சென்றுவிட்டார். அவர் நாகராஜை கல்கத்தா கொண்டு சென்று அங்கு ஒரு பணக்காரனுக்கு அடிமையாக விற்றுவிட்டார்.

சில காலம் சென்றபின் இரக்க சித்தமுடைய அந்தப் பணக்காரர் நாகராஜை விடுவித்து விட்டார். விடுவிக்கப் பட்டதும் கல்கத்தாவிலிருந்த சந்நியாசிகளின் குழுவுடன் போய்ச் சேர்ந்துகொண்டார் நாகராஜ். அவர்களிடம் வேத உபநிடதங்களையும் இதிகாசங்களையும் கற்று சிறந்த அறிஞனானார்.

தனது பதினோராவது வயதில் சந்நியாசிகளுடன் சேர்ந்து இலங்கையிலுள்ள கதிர்காமத்திற்கு பயணம் மேற்கொண்டார் நாகராஜ். கதிர்காமத்தில் சித்தர் போகநாதரைச் சந்தித்த நாகராஜ், அவரது சீடரானார்.

போகரின் வழிகாட்டலில் யோக சாதனைகளையும் தியானக் கிரியைகளையும் பழகினார். அவற்றைப் பயின்று கதிர்காமத்தில் சவிகற்ப சமாதி நிலையை அடைந்தார் நாகராஜ். அதோடு அங்கு முருகனின் தரிசனமும் பெற்றார்.

போகநாதர், அகஸ்தியரிடம் சென்று க்ரியா குண்டலினி பிராணாயாமத்தில் உபதேசம் பெறும்படி நாகராஜை பொதிகைக்கு அனுப்பிவைத்தார். பொதிகை மலை சென்ற நாகராஜ் அகஸ்தியரின் தரிசனம் பெறவேண்டி நாற்பத்தெட்டு நாட்கள் தியானத்தில் அமர்ந்தார்.

நாற்பத்தெட்டாம் நாள், நாகராஜ் கிட்டத்தட்ட வாழ்வின் முடிவை நெருங்கிவிட்ட நேரத்தில் அகஸ்தியர் தரிசனமளித்து அவரைக் காப்பாற்றினார். அங்கே நாகராஜுக்கு க்ரியா குண்டலினி பிராணாயாமத்தில் தீட்சையளித்து, அதன் நுணுக்கங்களையும் விளக்கி, இமயமலையிலுள்ள பத்ரிநாத்துக்குச் செல்லும்படி பணித்தார் அகஸ்தியர்.

பத்ரிநாத்தில் பதினெட்டு மாதங்கள் க்ரியா யோக நுணுக்கங்களை எல்லாம் தீவிரமாகப் பயிற்சி செய்து சொருப சமாதி அடைந்தார். அன்றிலிருந்து சித்தர் பாபாஜியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே அன்பர்களுக்கு உதவி வருகிறார். வெகு சிலருக்கு மட்டுமே அவர் நேரடியாக தீட்சை வழங்கியிருக்கிறார்.

ஆதிசங்கரர், கபீர், லாகிரி மகாசயர், யோகி ராமையா, நீலகண்டன் போன்ற சிலருக்கு மட்டுமே பாபாஜி நேரடியாக தீட்சை வழங்கினார். அப்படி தீட்சை வழங்கப்பட்டவர்களுள் ஒருவரான யோகியார் ராமையா மூலம் இவரது இளம் பிராயத்துக் கதை வெளிப்படுத்தப் பட்டது. The Voice of Babaji and Mysticism Unlocked, Babaji’s Master key to All, மற்றும் Death of Death என்ற மூன்று நூல்களும் பாபாஜி சொல்லச் சொல்ல நீலகண்டனால் எழுதப்பட்டவை.

பத்ரிநாத்தில் சொரூப சமாதியடைந்த இவரைப் பற்றி வெளி உலகுக்கு அறியக் கிடைத்த தகவல்கள் வெகு சிலவே. ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட க்ரியா யோகத்தை முன்னெடுத்துச் செல்லும் மாபெரும் ஆசிரியர் பாபாஜி. இரண்டாயிரம் ஆண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாயோகி.

இவர் க்ரியா பாபாஜி, பாபாஜி நாகராஜ், மகாவதார பாபாஜி, சிவாபாபா என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர். சாவை வென்று, என்றும் பதினாறு வயதினராக வாழும் பாபாஜி ஒரு மாபெரும் சித்தர். மகா அவதாரம் என்று போற்றப்படுபவர்.

உலகம் முழுவதும் தெய்வீகப் பேரருள் பொழியச் செய்வதே பாபாஜியின் முக்கிய பணி. இது தூய அன்புடன் தன்னலமற்ற தொண்டு செய்பவர்கள் மூலமாக உலகுக்கு வெளிப்படுகிறது. தனது சகோதரி மாதாஜி நாகலட்சுமி தேவியாருடன் பத்ரிநாத்தில் உள்ள தனது ஆசிரமத்தில் வாழ்ந்து வருகிறார் பாபாஜி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே