கேரளாவில் 2ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்பு உள்ளது.
விமானிகளுக்கு இடையேயான உரையாடலை பதிவு செய்யும் சிவிஆர் கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்து கொண்டிருந்தனர்.
5 பணியாளர்கள், இரண்டு விமானிகள் என மொத்தம் 191 பேர் விமானத்தில் இருந்துள்ளனர். கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று இரவு கோழிக்கோடில் கனமழை பெய்தது. விமானத்தை இரவு 7.40 மணியளவில் தரையிரக்க விமானிகள் முயற்சித்தனர்.
ஆனால் மழை காரணமாக தரையிறக்குவதில் இரு முறை சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் மூன்றாவது முறை 10ஆவது ஓடு தளத்தில் தரையிறக்க முயன்றபோது விமானம் சருக்கிச் சென்றுள்ளது. மேலும், ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போதைய தகவல் தெரிவிக்கின்றது. மேலும், 110 பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த ஒருவருக்கும், சிகிச்சை பெற்று வரும் 40 பேருக்கு கொரோனா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தற்போது விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.