கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 3ஆவது நிலைக்கு சென்றுவிடுவதை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி கூறிய ஊரடங்கு உத்தரவை நாம் பின்பற்றுவோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை தடுக்க நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வேண்டுகோளை பல்வேறு திரை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து அதுகுறித்து வீடியோ, ட்வீட் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அது போல் நடிகர் ரஜினிகாந்தும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலமும் கருத்து மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2ஆவது நிலையில் உள்ளது.
அது மூன்றாவது நிலைக்கு சென்றுவிடக் கூடாது.
வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் உள்ள கொரோனா வைரஸ் 12 மணியிலிருந்து 14 மணி நேரம் வரை அது பரவாமல் இருந்தாலே 3ஆவது நிலைக்கு செல்லாமல் தடுத்தி நிறுத்திவிடலாம்.
அதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி 22-ஆம் தேதி ஜனதா கர்ப்யூ என்ற பெயரில் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளார்கள்.
இதே மாதிரி இத்தாலியில் கொரோனா வைரஸ் 2ஆவது ஸ்டேஜில் இருந்த போது அந்நாட்டு அரசாங்கம் மக்களை எச்சரித்தது. ஊரடங்கு உத்தரவையும் போட்டது.
ஆனால் அந்த நாட்டு மக்கள் அதை பின்பற்றாமல் உதாசீனப்படுத்திவிட்டார்கள்.
அதனால் பல ஆயிரம் உயிர்கள் பலியானது. அது மாதிரி ஒரு நிலைமை நம் இந்தியாவில் ஏற்படக் கூடாது.
அதனால் பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நாளை அந்த ஊரடங்கு உத்தரவுக்கு கண்டிப்பாக ஒத்துழைப்பு அளிப்போம்.
இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அதை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றி வருகிறார்கள்.
அவர்களுக்காக பிரதமர் சொன்னது போல் 22ஆம் தேதி 5 மணிக்கு அவர்களை மனதார பாராட்டுவோம்.
அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக் கொள்வோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.