கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னை வந்தடைந்தன

தமிழக அரசு தென் கொரியாவிடம் ஆர்டர் செய்திருந்த 10 லட்சம் பி.சி.ஆர் கருவிகளில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவி வந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதே நேரத்தில் போதுமான அளவுக்கு பரிசோதனைகள் செய்யப்படுவது இல்லை, தமிழகம் முழுவதும் பரவலாக பரிசோதனை செய்யப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

தமிழக அரசு தரப்பில் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து 10 லட்சம் பி.சி.ஆர் கருவியை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் இன்று தமிழகத்துக்கு ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவி வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்திடம் ஏற்கனவே 5.6 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளது.

கூடுதலாக ஒரு லட்சம் கிடைத்துள்ளது. வரும் நாட்களில் மீதமுள்ள ஒன்பது லட்சம் கருவிகளை வழங்குவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதனால் போதுமான அளவில் கொரோனாவைப் பரிசோதனை செய்ய கருவி நம்மிடம் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கையிருப்பில் 7 லட்சம் அளவுக்கு பி.சி.ஆர் கருவி உள்ளதால் சென்னை, மதுரை, கோவை மற்றும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே