கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல
மதுரையிலும் நாளை ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
தற்போது மதுரையிலும் 7 நாள்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளிலும் முழு முடக்கம் அமலில் இருக்கும்.
அனுமதி: அம்மா உணவகங்கள், சமுதாயக் கூடங்கள், மருத்துவ அவசர வாகனங்கள் இயங்க மட்டுமே அனுமதி உண்டு.
அனுமதி இல்லை: ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது,
மொபைல் வாயிலாக உணவு பொருள்களை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது.
தள்ளுவண்டிக் கடைகளில் காய்கறி, பழங்களை விற்பனை செய்ய காலை 6 மணி முதல் 1 மணி வரை அனுமதி. அத்தியாவசியப் பொருள்களை மக்கள் நடந்து சென்றே வாங்க வேண்டும். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் கடைகளுக்குச் சென்று பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கலாம்.
பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் தங்கியிருந்தால், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.