புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் உள்ளிட்ட கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 6,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் ஏற்கனவே உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க, 144 தடை உத்தரவுகளை கூட மாநில அரசுகள் பிறப்பிக்கலாம்.தேவை ஏற்படுமானால், இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தலாம். ஒவ்வொரு மாநிலமும், தங்கள் பகுதிகளில் சூழலுக்கு ஏற்ப பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம். மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.