ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 1,419 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. உடனடியாக அப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதுவரை 1,419 பேர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளதாகவும், 6,900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 37 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.