இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா வேக்சினை மனிதர்களுக்கு செலுத்தும் சோதனையை இந்தியாவில் மீண்டும் நடத்த சீரம் (Serum Institute of India) நிறுவனத்துக்கு மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை எட்டுகிறது.
கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது.
பல நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகளில் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.
சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவே கூறி வருகின்றன.
இங்கிலாந்தும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம்- ஆஸ்டர்செனகா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து AZD1222 வேக்சினை உருவாக்கி உள்ளது.
ஏற்கனவே 2 கட்டங்களாக இங்கிலாந்தில் வெற்றிகரமாக இந்த மருந்தை வைத்து சோதனை நடத்தப்பட்டுவிட்டது.
ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தை வைத்து Serum Institute of India இந்தியாவில் மனிதர்களுக்கு சோதனைகளை நடத்தி வருகிறது.
இங்கிலாந்தில் இம்மருந்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகளில் திடீரென நோயாளிகளுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டது தெரியவந்தது.
இதனால் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
பின்னர் இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை தொடங்கிவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த சோதனையை தொடருவதற்கு Serum Institute of India- சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்துக்கு மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்திருக்கிறது.
இதனால் இந்தியாவில் மீண்டும் கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.