பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை!
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிவிட்டார் என்று பரவும் தகவல் வெறும் வதந்தி என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று காலை சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டதாக செய்தி வெளியானது.
சில ஊடகங்கள் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்ததாக கூறின. சில ஊடகங்கள் எஸ்.பி.பி-யின் மகன் சரண் ட்வீட் செய்ததாக செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த தகவல் தவறானது என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “என் தந்தையின் உடல்நிலைப் பற்றி மருத்துவக் குழுவினர் என்னிடம் தகவல் தெரிவித்த பிறகு நானாக பதிவிட்டு வருகிறேன்.
எதிர்பாராத விதமாக இன்று காலையிலேயே ஒரு பதிவை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பாவின் உடல்நிலைப் பற்றிய விவரங்களைப் பெறும் ஒரே நபர் நான் மட்டும்தான். அப்படி இருக்கும்போது ஊடகங்களில் செய்தி எப்படி பரவியது என்று தெரியவில்லை.
எனது தந்தைக்கு கொரோனா பாசிட்டிவா, நெகட்டிவா என்பது இப்போது முக்கியம் இல்லை.
அவரது உடல்நிலை தொடர்ந்து சீரான நிலையில் உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எனது தந்தை பற்றி வதந்தி பரப்புவதை வதந்தியைப் பரப்புகிறவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.