வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1.70 லட்சத்தைத் தாண்டி உள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கண்டறியப்பட்டது தான் கொரோனா வைரஸ். அவ்வளவு கொடூர வைரசாக மாற போகிறது என்று தொடக்கத்தில் யாரும் நினைக்கவில்லை.
உலகில் கிட்டத்தட்ட 200 நாடுகளை கபளீகரம் செய்து வருகிறது இந்த கொரோனா வைரஸ். இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்தாகிவிட்டது என்று ரஷ்யா அறிவித்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அதை ஏற்க மறுக்கின்றன.
உலக சுகாதார அமைப்பும் பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. இந் நிலையில், அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1.70 லட்சத்தைத் தாண்டி உள்ளதாக ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிக கொரோனா தொற்றுகள் காணப்படுகின்றன. அங்கு நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 54 லட்சத்தைக் கடந்துள்ளது.
பலியானவர்களின் எண்ணிக்கை 1,70,019 ஆக இருக்கிறது. அதிகபட்சமாக நியூயார்க்கில் 32,840 பேர் உயிரிழந்துள்ளனர். நியூ ஜெர்சியில் 15,912 பேரும், கலிபோர்னியா, டெக்சாஸ் மாகாணங்களில் தலா 10,000 பேரும் பலியாகி உள்ளதாக ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.