வெள்ள நீரை சேகரிக்க தரைமட்டத்திற்கு கீழ் மிகப்பெரிய குளங்களை செயற்கையாக உருவாக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்ட்டிரா மாநிலம் தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
வெள்ளநீரை அப்புறப்படுத்த அம்மாநில அரசு பல நடவடிக்கைகையை எடுத்து வருகிறது.மும்பையில் வழக்கமாக பெய்ய வேண்டிய பருவ மழையில் ஆகஸ்ட் முதல் 5 நாட்களில் மட்டும் 64 சதவித மழையைப் பெற்று விட்டது.
குறிப்பாக தெற்கு மும்பை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு மும்பையில் தரைக்கு அடியில் மிகப்பெரிய குளங்களை செயற்கையாக உருவாக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அடைமழையின் போது வெள்ளம் ஏற்படுவதை தடுக்கும் விதமாக மழை நீர் இந்த பெரிய செயற்கை குளங்களில் சேகரிக்கப்படும் என்றும், மழை ஓய்ந்த பிறகு இந்த வெள்ள நீர் மோட்டார் மூலம் கடலுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மாதிரியான முறைகளை ஜப்பான், தென்கொரியா நடைமுறைப்படுத்தியுள்ளதாக மும்பை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.