ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 10ம் தேதி நடைபெறும்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடர் நடத்தப்படுமா என்று ரசிகர்களிடையே கேள்வியெழுந்தது.
இந்நிலையில், இந்தியா விடுத்து, வெளிநாட்டில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்தவும் திட்டம் இருந்தது.
இந்த சூழலில், ஐபிஎல் அமைப்பின் கவுன்சில் கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.
மேலும், சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பை தொடரவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 24 வீரர்களை அழைத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 53 நாட்கள் போட்டிகள் நடத்தப்படுகிறது.
குறிப்பாக தொடகத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும், சூழலைக் கருத்தில் கொண்டு பின்னர் 20% முதல் 35% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய நேரப்படி முதல் போட்டி மாலை 3.30 மணிக்கும், 2வது போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடரின் போது வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், மாற்று வீரரை களமிறக்கிக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.