பாஸ்டேக் முறைக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

பாஸ்டேக் கட்டண முறை தொடர்பான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கபிலன் மனோகரன் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்தது.

இதன்படி பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறையில் கட்டணம் செலுத்தாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்தினால் தான் சுங்கச்சாவடியை கடக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பாஸ்டேக் கட்டண முறை தொடர்பான அறிவிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாஸ்டேக் கட்டண முறை தொடர்பான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே