MBBS-ல் மத்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ படிப்பிலும் நீட் தேர்வு உள்ளது.
நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை. அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதும் இல்லை.
இதுவரை பல ஆயிரம் இடங்களை இப்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை.
மருத்துவ படிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது.
இதற்கிடையே, முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்களை நேற்று முன்தினம் விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரே காணத்திற்காக அனைத்து தமிழக கட்சிகளும் ஒன்றிணைந்தது வரவேற்கத்தக்கது.
இருப்பினும், இடஒதுக்கீடு அடிப்படை உரிமையின்கீழ் வராது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வலியுறுத்தி மனுவை திரும்ப பெறுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, MBBS-ல் மத்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மற்றும் மதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காதது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
தகுதியான மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதற்கு மத்திய அரசே துணைபோகக் கூடாது. ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை மத்திய அரசே மீறுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.