பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தள்ளிவைக்கக் கோரிய வழக்கை, தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அரசு கூறி உள்ளது.
இந்நிலையில் தென்காசியை சேர்ந்த கனகராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில் ஜூன் 15ம் தேதி நடக்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தள்ளிவைக்க வேண்டுமென அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், மன உளைச்சலில் உள்ள மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள தயாராக இருக்கமாட்டார்கள் என்றும்; தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது .
இந்த மனு இன்று நீதிபதிகள் பி.என். பிரகாஷ், மற்றும் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆனால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.