அரசு, தனியார் ஊழியர்கள் ‘ஆரோக்கிய சேது’ செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருப்பது கட்டாயம்என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ‘ஆரோக்கிய சேது’ செயலியை அறிமுகம் செய்தது.
கடந்த 11-ம் தேதி மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, “ஆரோக்கிய சேது செயலியை போக்குவரத்துக்கான மின்னணு அனுமதிசான்றாக (இ-பாஸ்) பயன்படுத்தலாம்” என்றார்.
வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கடந்த வாரம்கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அனைவரும் செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு உத்தரவிட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், தனியார் ஊழியர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து செயல்பாட்டில் வைத்திருப்பது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. மேலும் கரோனா வைரஸ்தொற்று காரணமாக தடை செய்யப்பட்டிருக்கும் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறு செயல்படுகிறது?
தேசிய, மாநில மருத்துவ உதவிமையங்களின் தொலைபேசி எண்கள் செயலியில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் கரோனா வைரஸ் குறித்த அனைத்து செய்திகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகள், வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு அருகில் நீங்கள் செல்லும்போது ஆரோக்கிய சேது செயலி எச்சரிக்கை விடுக்கும். இந்த எச்சரிக்கை வசதியை பெறுவதற்கு செல்போனில் புளுடூத்தை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மேலும் லொகேஷன் ஷேரிங்கை (location sharing), ஆல்வேஸில் (Always) வைத்திருக்க வேண்டும்.
கரோனா வைரஸ் பரவலைதடுக்கும் நோக்கில் ஆரோக்கியசேது செயலி வெளியிடப்பட்டிருந்தாலும் அந்த செயலியை பயன்படுத்துவோரின் அந்தரங்க உரிமைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ‘இன்டர்நெட் பிரீடம் பவுண்டேசன்’ உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டின.
இதுகுறித்து மத்திய அரசின்’MyGovIndia’ தலைமை செயல் அதிகாரி அபிஷேக் சிங்வி கூறும்போது, “இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். மருத்துவ அவசர நிலைக்காகவே இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. பயனாளர்களின் தகவல்கள் வேறு எதற்கும் பயன்படுத்தப்படாது” என்று உறுதி அளித்தார்.
அன்பு வாசகர்களே….
வரும் மே 3 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.