உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அயோத்தியில் முஸ்லிம்களுக்கான 5 ஏக்கர் உத்திரப்பிரதேசம் சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் நிர்வாகிகள் அதில் கட்டப்படும் மசூதிக்கும் பாபர் பெயர் வைக்கப்படமாட்டாது என அறிவித்துள்ளனர்.
வட இந்தியாவில் நிலவிய முகலாயர் ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி துவங்கிய காலத்தில் 1885 இல் ராமஜென்ம பூமி எனும் அமைப்பின் தலைவராக இருந்த ரகுபீர்தாஸ் என்பவர் பைசாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார்.
அதில், பாபர் மசூதியின் அருகிலுள்ள ராம் ஜபுத்திரா எனும் இடத்தில் 21 அடி நீளம் மற்றும் 17 அடி அகலத்தில் ராமருக்காக ஒரு கோயில் கட்ட அனுமதி வேண்டினார்.
இதை எதிர்த்த முகம்மது அஸ்கர் என்பவர், இப்பிரச்சனையால் 1855 இல் மதக்கலவரம் ஏற்பட்டதால் ரகுபீர்தாசை அனுமதிக்க கூடாது என வேண்டினார்.
அஸ்கரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி கர்னல் எஃப்.ஈ.ஏ.சேமியர் என்பவர் மார்ச் 18, 1886 இல் அமைதி கெடும் என கோயில் கட்ட அனுமதி மறுத்தார்.
இதன் மீதான அப்பீல் மனுவும் நவம்பர் 1, 1886 இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
பிறகு நாடு சுதந்திரம்பெற்ற பின் அயோத்தி மீதான வழக்கு மீண்டும் பைஸாபாத் நீதிமன்றத்தில் இருந்து துவங்கியது.
இதன் மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பு கடந்த ஆண்டு நவம்பர் 9 இல் வெளியானது.
இதில், பிரச்சனைக்குரிய நிலம் இந்து தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அங்கு அரசு சார்பில் ஒரு அறக்கட்டளை அமைத்து ராமர் கோயில் கட்டவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதேபோல், முஸ்லிம்களுக்காக மசூதி கட்ட அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, ராமர் கோயில் கட்டுவதற்கானப் பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது.
இதற்கு இருதினங்கள் முன்பாக நேற்று அயோத்தி முஸ்லிம்களுக்காக மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிலப்பத்திரங்கள் உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் பெயரில் அதன் நிர்வாகிகளிடம் அயோத்யா மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா வழங்கினார்.
இந்த நிலம், ராமஜென்ம பூமியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள தனிபூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
இங்கு மசூதி கட்டவேண்டி உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியம் சார்பில் ‘இந்தோ இஸ்லாமிக் கல்சுரல் பவுண்டேஷன் டிரஸ்ட்(ஐஐசிபிடி)’ எனும் பெயரில் ஒரு அறக்கட்டளையும் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 15 உறுப்பினர்கள் கொண்டதில் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மீது 6 பேர் பிறகு சேர்க்கப்பட உள்ளனர். இவர்களால் கட்டப்படும் மசூதிக்கு பாபர் பெயர் வைக்கப்போவதில்லை என அறக்கட்டளையினர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து ஐஐசிபிடியின் செயலாளரான அத்தர் உசைன் கூறும்போது, ”இந்தியாவில் பாபர் பெயர் என்பது அயோத்தி பிரச்சனையால் வெறுக்கக் கூடிய வகையிலாகி விட்டது.
எனவே, இங்கு கட்டப்படும் மசூதிக்கு எக்காரணத்தை கொண்டும் பாபர் பெயர் வைக்கப்பட மாட்டாது.
அல்லாவிற்கான மசூதியை யார் கட்டினாலும் அதற்கு வைக்கப்படும் பெயர் முக்கியமல்ல. கரோனா பரவல் முடிந்ததும் அதன் மீது கூடி ஆலோசனை செய்வோம்.” எனத் தெரிவித்தார்.
இந்த 5 ஏக்கரில் மசூதியுடன் சேர்த்து ஒரு கல்விக்கூடமும், ஆய்வுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் வரலாற்றை அறிந்துகொள்ளூம் வகையில் ஒரு நூலகமும், அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது.