சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பரிசோதனை மைய உரிமையாளர்கள் உடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
இந்த நடவடிக்கை, கொரோனா பரிசோதனை செய்யும் நபர்களுக்கு பயத்தை உண்டாக்கும் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், சென்னையில் பரிசோதனை செய்யும் தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவர் என்கிற உத்தரவு சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையே, மக்களை பயமுறுத்தும் நோக்கமல்ல.
சென்னையில் அதிகமான ஆய்வகங்கள் உள்ளன.
அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே, மற்ற மாவட்டங்கள் / மாநிலங்கள் போன்றவற்றிலிருந்து வருபவர்களை சோதனை இல்லாமல் தனிமைப்படுத்தி வருகிறோம்.
இது பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கம் மட்டுமே.
இந்த நடவடிக்கை மூலம் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், கொரோனா தொற்று பரிசோதனை செய்த பின்னர் முடிவுகள் வரும் இரண்டு நாட்களுக்குள் தொற்று பாதித்து உள்ள நபர் மூலம் பலருக்கும் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த விதமான பரவலை தடுக்கும் நோக்கத்தில் தான் சென்னை மாநகராட்சி இம்முடிவை எடுத்துள்ளது என்றார்.
மேலும், பரிசோதனைக்கு சென்ற ஒருவரின் சோதனை முடிவுகளில் முதலில் நெகட்டிவ் என வரும். பின்னர் ஒரு சில நாட்களில் மீண்டும் அவருக்கு பாஸிட்டிவ் ஆக வரும்.
எனவே அவர்களையும் தனிமைப் படுத்தும் நடவடிக்கை அவசியமாகிறது என்றவர், முழுமையாக நெகட்டிவ் என முடிவுகள் வந்தால் அந்த நபர்களுக்கு தனிமைப் படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்றார்.