தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது.காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், அரசு அறிவித்தபடி 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.அதன்படி 9 லட்சத்து 39ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், 4 லட்சத்து 68ஆயிரத்து 70 மாணவிகள், 4 லட்சத்து 71ஆயிரத்து 759 மாணவர்கள் ஆவர். அதேபோல, 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 6,235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 5,248 மாணவர்களுக்கு வெளியிடாதது பற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,
- 5,248 மாணவர்களில் 231 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பின் இயற்கை மரணமடைந்து விட்டனர்.
- மாற்றுச்சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டு 658 மாணவர்கள் இடையிலேயே நின்று விட்டனர்.
- காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிகளுக்கு 4,359 மாணவர்கள் முழுமையாக வரவில்லை என விளக்கம் அளித்துள்ளது.