பாம்பு, முதலைகளை காட்டி பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் விடுத்த பாக்., பாடகி

மலைப்பாம்புகள், முதலைகளைக் கொண்டு இந்தியப் பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் பாடகிக்கு அந்நாட்டு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பாடகி ரபி பிர்ஸதா  என்பவர், கடந்த மாதம் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய போது, மலைப்பாம்புகள், முதலைகளை வைத்துக் கொண்டு இந்தப் பரிசுகள் அனைத்தும் பிரதமர் மோடிக்கே என்றும், தன் தோழர்கள் அவருக்கு விருந்தளிக்கக் காத்திருப்பதாகவும் கூறி யூடியூபில் வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் அவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறி பாகிஸ்தான் வனத்துறை அபராதம் விதித்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அந்த பாடகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்த பாடகி, தான் பல செய்தி விவாதங்களில் அதே பாம்பு, முதலைகளுடன் தோன்றும் போதெல்லாம் எதுவும் கூறாமல் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட்டதும் தன்மீது பாகிஸ்தான் வனத்துறை நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், அவற்றை வாடகைக்கு எடுத்ததாகவும், துரோகிகளான பாகிஸ்தான் வனத்துறையை விட இந்தியர்கள் எவ்வளவோ மேல் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடியை மட்டுமே குறிப்பிட்டு பேசியதாகவும், இந்தியர்களை விமர்சிக்கவில்லை என்றும் பாடகி ரபி பிர்ஸதா கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே