சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஈரான்தான் தாக்குதல் நடத்தியது -அமெரிக்கா குற்றச்சாட்டு

சவூதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்தான் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ரியாத்தில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புக்கியாக் மற்றும் குரைஸ் பகுதிகளில் அரம்கோ நிறுவனத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.

இந்த ஆலைகள் மீது ஆளில்லா குட்டி விமானங்களை கொண்டு நேற்று திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு தீப்பிடித்து பற்றி எரிந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதாக சவுதி அரசு தெரிவித்தாலும், அதனால் ஏற்பட்ட புகை மண்டலம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியுள்ளது.

தற்போதுவரை 5 மில்லியன் பேரல் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஏமன் நாட்டில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சிப் படையினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதற்கு எந்த ஆதாரமுமில்லை என்றும், ஈரான்தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அதிபர் ரூஹானியும், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷரீஃபும் (Rouhani and Zarif ) பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்திக் கொண்டே, உலகின் எரிசக்தி விநியோகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக மைக் பாம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே