வடபழனியில் மாநகர பேருந்து மோதி பெண் பயணி உயிரிழப்பு

சென்னை வடபழனியில், பேருந்து நிலையத்துக்குள் மாநகர பேருந்து மோதி விபத்து ஏற்படுத்தியதில், பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வடபழனியில் உள்ள தனியார் சுகாதார மையத்தில் பணியாற்றும் மீனா என்ற பெண், நேற்றிரவு பணி முடிந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு செல்ல வடபழனி பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அவர் நிலையத்துக்குள் நுழைந்து, ஓரமாக செல்ல முயன்றபோது, ஆற்காடு சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் நுழைந்த நகர பேருந்து ஒன்று அவர் மீது மோதியது.

இதில் கீழே விழுந்து தலையில் படுகாயமுற்ற அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்து நடந்த பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால், விபத்தை ஏற்படுத்திய பேருந்து மற்றும் அதன் ஓட்டுனர் விவரம் தெரியவில்லை.

இருப்பினும் விபத்து தொடர்பாக இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த வடபழனி போலீசார், அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே