மரம் வளர்ப்பு காலத்தின் தேவை – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் ஈஷா அறக்கட்டளையின் பசுமைக்கரங்கள் இயக்கம் சார்பில் காவிரி கூக்குரல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மரங்கள் இருப்பதால் தான் ஓசோன் பாதுகாக்கப்படுகிறது என்றும் நீர் வளம் பெருகுகிறது என்றும் முதலமைச்சர் கூறினார்.

தமிழக அரசு இதுவரை பல்வேறு திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மரங்கள் நட்டு உள்ளதாகவும், தேக்கு மரக்கன்றுகள் மட்டும் கடந்த இரு ஆண்டுகளில் 2.40 லட்சம் எண்ணிக்கையில் நடப்பட்டுள்ளன என்றும் முதல்வர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பனை விதைகள் தமிழகத்தில் நடப்பட்டுள்ளது என்றும், இதேபோல் நடப்பாண்டில் 2 கோடியே 50 லட்சம் பனை விதைகள் நட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மரங்களை நட்டால் தமிழகம் பசும் சோலைவனமாகும் என்றும், 742 கோடி மரம் நடும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். இந்த நடவடிக்கைக்கு சத்குருவிற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் கூறினார்.

காவிரியை பாதுகாக்கும் தமிழக அரசின் நடவடிக்கை, குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது சுட்டிக்காட்டிய அவர், வைகை பாலாறு உள்ளிட்ட ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாடு முழுவதும் தடை செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மழைநீர் சேமிப்பு திட்டம் போல மரம் வளர்க்கும் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே