மண்டபம் பகுதியில் 200 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல்

இராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகளை உயிருடன் பறிமுதல் செய்த போலீஸார், 11 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்டபம் மற்றும் வேதாளைப் பகுதிகளில் அரிய வகை கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மண்டபம் வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் மற்றும் கடற்கரை காவல்நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் கடற்கரை காவல்நிலையத்துக்கு சொந்தமான ரோந்து படகு மூலம் சோதனை மேற்கொண்ட போலீஸார், கோவில்வாடி மீன் பிடி துறைமுகத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு படகுகளை சோதனை செய்தனர்.

அதில் உயிருடன் 200 கிலோ கடல் அட்டைகள் மற்றும் சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட வலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விசைப்படகுகள் உட்பட 200 கிலோ கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்த போலீஸார்,  11 பேரை கைது செய்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகளையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகள் பாம்பன் கடலில் விட்டனர்.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே