பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தாய்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெற்ற தாயால் இடைத்தரகர் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தையை, கணவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

வாணியம்பாடி அடுத்த இந்திராநகர் பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில், 3வதாக முருகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து ஒருவருடம் கடந்த நிலையில், காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன் சிகிச்சைக்காக தர்மபுரி சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்த முருகன், மனைவி சத்யாவிடம் கேட்டுள்ளார்.

ஆனால் ஏதேதோ பதில்கூறி சத்யா மழுப்பியதால், சந்தேகமடைந்த அவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் மனைவி சத்யா மீது புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சத்யாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், குழந்தையை பெங்களூர் ஜெய் நகர் பகுதியை ரஹமத் – சகிலா தம்பதியினருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் 65 ஆயிரம் ரூபாயை முன்பணமாக பெற்றுக் கொண்டு குழந்தையை கொடுத்து 2 மாதங்கள் ஆகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பெரியம்மா கீதாவின் ஆலோசனையின் பேரில், கவிதா எனும் இடைத்தரகர் மூலம் குழந்தையை விற்றதாகவும் கூறியுள்ளார்.

குழந்தையை வாங்கிய தம்பதியர், இடைத்தரகர் கவிதா, தாய் சத்தியா, அவரது பெரியம்மா கீதா

இதையடுத்து பெங்களூர் விரைந்த வாணியம்பாடி காவல்துறையினர் குழந்தையை மீட்டதோடு, குழந்தையை வாங்கிய தம்பதியர், இடைத்தரகர் கவிதா, தாய் சத்தியா, அவரது பெரியம்மா கீதா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே