பெங்களூரு மேயர் தேர்தல் – 17 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி

பெங்களூரு மாநகர மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் கவுதம் குமார் வெற்றிபெற்றுள்ளார்.

பெங்களூரு மேயராக பதவிவகித்துவந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கங்காம்பிகேவின் பதவிக் காலம் முடிவடைந்ததால் புதிய மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

கவுன்சிலர்கள் மட்டுமல்லாது, பெங்களூரு எல்லைக்குட்பட்ட எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சிக்கள் மற்றும் எம்.பி.க்கள் என மொத்தம் 257 பேருக்கு இத்தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு என்ற நிலையில், 129 வாக்குகளைப் பெறும் வாக்காளர் மேயராக தேர்வு செய்யப்படுவார் என்ற சூழல் இருந்தது.

அந்த வகையில் விறுவிறுப்பாக நடந்த தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த கவுதம் குமார் 129 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

இதன்மூலம் பெங்களூரு மேயராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சத்யநாராயணாவைவிட 17 வாக்குகள் அதிகம் பெற்று இந்த வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசின் ஆட்சி கவிழ்ந்து மாநில ஆட்சியை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், இந்த மேயர் தேர்தல் வெற்றியானது முக்கியமானதாக கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே