சத்தியமங்கலத்தில் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து ரூ.15 கோடி மோசடி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை சந்தன டிப்போ மேற்கு வீதியில் குவாலிடி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரிலீப் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. நிறுவனத்தில் கேம்பநாயக்கென்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குனராகவும் கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரகாஷ் மற்றும் கவுந்தப்பாடி ஆண்டிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகிய 3 பேர் பங்குதாரர்களாகவும் இருந்துள்ளன.

இந்த நிலையில் தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 100 நாட்களுக்கு தினமும் 2,500 ரூபாய் வீதம் வழங்குவதாக ஆன்லைனில் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்துள்ளனர். பணத்தை பெற்றவுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் ஒப்பந்த பத்திரம் வழங்கியதுடன் பணம் செலுத்தி அவர்களின் வங்கிக்கணக்கில் தினமும் 2,500 ரூபாய் செலுத்தியதால் இதனை நம்பி ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாததால் தங்கள் பணத்தை திருப்பித் தருமாறு வற்புறுத்தி வந்துள்ளனர். நிறுவனத்தை நடத்தி வந்த தங்கராஜ், ஆனந்த், பிரகாஷ் ஆகியோர் தலைமறைவானதால் பணம் செலுத்தி ஏமாந்த 3 பேர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து நிறுவன பங்குதாரர் பிரபாகரன், தங்கராஜ்ஜின் தந்தை துரைசாமி, காசோலை வழங்கிய பொன்னுசாமி ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த நிறுவனம் சுமார் 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே