கார்ப்பரேட் வரிக் குறைப்பு பலனை, வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில், குறிப்பிட்ட மாடல் கார்களின் விலையில் 5,000 ரூபாயை மாருதி சுசுகி நிறுவனம் குறைத்துக் கொண்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் சரிவை சந்தித்ததால், ஆட்டோ மொபைல் துறை பாதிக்கப்பட்டது.
சில கார் நிறுவனங்கள், உற்பத்தியில்லா நாட்களை அறிவிக்கும் சூழல் உண்டானது. வேலையிழப்பும் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதே மாதத்தில் உள்நாட்டு கார் விற்பனை 41 விழுக்காடு அளவுக்கு சரிந்தது.
இதை அடுத்து, கம்பெனிகள் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் செலுத்தும் கார்ப்பரேட் வரியை மத்திய அரசு கணிசமாக குறைத்தது.
இந்த வரிக்குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளித்து, கார்கள் விற்பனையை மீண்டும் அதிகரிக்கச் செய்ய மாருதி சுசுகி நிறுவனம் முடிவு செய்தது.
அதன்படி, கார்களின் ஷோரூமுக்கு முந்தைய விலையில், 5 ஆயிரம் ரூபாயை மாருதி சுசுகி குறைத்து அறிவித்துள்ளது.
- ஆல்டோ 800,
- ஆல்டோ கே 10,
- ஸ்விப்ட் டீசல்,
- செலிரியோ,
- பலேனோ டீசல்,
- இக்னிஸ்,
- டிஸையர் டீசல்,
- விட்டாரா பிரெஸ்ஸா மற்றும்
- எஸ் – கிராஸ் ஆகிய கார்களுக்கு விலைக்குறைப்பு பொருந்தும்.
விலைக்குறைப்பானது நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.