கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை

தமிழகத்தில் கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது.

அதில் தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் 23 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடாத நிலையில் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்கக்கோரி தமிழ் வழி கல்வி பயின்ற மதுரையை சேர்ந்த டயானா உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன் அனுப்பப்பட்ட நுழைவு சீட்டில் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இதுதொடர்பாக விளக்கம் அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே