ஐ.நா. பொதுச்சபையில் இம்ரான் கான் பேச்சுக்கு இந்திய பிரதிநிதி பதிலடி

ஐ.நா. பொதுச்சபையில் முதல் முறையாக நேற்று உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் அணுஆயுதப் போர் வெடித்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என மிரட்டினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் என்ன வேண்டுமானாலும் நேரிடும் என்றும் இம்ரான்கான் கூறினார்.

இந்தியாவைவிட 7 மடங்கு சிறிய நாடான பாகிஸ்தான் சரணடைவதா?? சுதந்திரத்திற்காக கடைசி வரை போரிடுவதா?? என்ற நிலை வந்தால், அணுஆயுதத்தை வைத்திருக்கும் நிலையில், கடைசி வரை போரிடுவதையே தேர்வு செய்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய நிலை எல்லை தாண்டிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிப்பதாக தெரிவித்த இம்ரான்கான், இது அச்சுறுத்தல் அல்ல, நாம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் கவலை என்று கூறினார்.

இந்நிலையில், இம்ரான்கான் பேச்சுக்கு ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா பதிலளித்துள்ளது. மோதலைத் தூண்டுபவர்கள் அமைதியை வரவேற்க மாட்டார்கள் என்பதையே, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் தீய எதிர்வினை காட்டுவதாக ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி விதிஷா மைத்ரா குறிப்பிட்டார்.

இந்த மாமன்றத்தில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் வரலாற்றில் பதிவு பெறும் என்பதை மறந்துவிடக் கூடாது என கூறிய விதிஷா, இம்ரானின் கானின் பேச்சு ஐ.நாவில் பிளவைத் தூண்டும் முயற்சி என குறிப்பிட்டார்.

வேறுபாடுகளை கூர்மையாக்கி வெறுப்பைத் தூண்டும் இம்ரான்கானின் பேச்சை, சுருக்கமாக வெறுப்பைக் கக்கும் பேச்சு என வரையறுத்துவிடலாம் என இந்திய பிரதிநிதி கூறினார்.

“எங்களுக்கு எதிராக அவர்கள்”, “பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகள்”, “முஸ்லிம்களுக்கு எதிராக மற்றவர்கள்” என, உலகில் எல்லாவற்றையும் இரண்டு எதிரெதிர் நிலைகளில் நிறுத்தும், குரூரமான சித்தரிப்பையே பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு காட்டுவதாகவும் விதிஷா விமர்சித்தார்.

அணுஆயுத அச்சுறுத்தல் விடுக்கும் இம்ரான்கான் பேச்சின் தரம், ராஜதந்திரத்தில் சேராது என்றும், அச்சுறுத்தல்வாதத்திலேயே சேரும் என்றும் இந்திய பிரதிநிதி சாடினார்.

பாகிஸ்தான் பிரதமரைக் குறிப்பிடும்போது, அவரது முழுப்பெயரான இம்ரான்கான் நியாசி என்று விதிஷா குறிப்பிட்டார். இந்திய பிரதிநிதி விதிஷாவின் பேச்சை, பாகிஸ்தானின் பிரதிநிதி கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே