தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி மும்முரப்படுத்தி வருகிறது.
அண்மையில் கட்சிக்கான மாநிலச் செயலாளர்களை நியமித்த கமல்ஹாசன், தேர்தல் பணிகளில் உடனே ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.
அதோடு அவ்வப்போது நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறார்.
இதனிடையே, தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கிய கமல்ஹாசன் அரசு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
ஆனால், தேர்தல் கூட்டணி பற்றிய எந்த தகவலையும் இன்னும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கம் ஜெகஜீவன்ராம் பகுதியில் வடிகால் அமைப்புகளை கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன் பின்னர் பேசிய அவர், “ஜெகஜீவன்ராம் சாலையில் மழைநீர் வடிகால் அமைத்ததில் ஜெர்மனி தொழில்நுட்பம் ஏதும் தென்படவில்லை.
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வரும்போது சட்டப்பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார். உப்பை சுவாசித்தவருக்கு நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.