கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் செல்போன் கடை வணிகர்கள் தந்தை, மகன்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரண வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆஜரான பெண் காவலரிடம், சிபிசிஐடி ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது.
கடந்த 19-ம் தேதி இரவு, ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
காவல் நிலையத்தில் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டதே உயிரிழக்கக் காரணம் என்று ஆதாரங்கள் அடிப்படையில் உண்மையாகிறது.
தேசிய அளவில் வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் உட்பட பலரும் இச்சம்பவத்தைக் கண்டித்ததோடு சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சாத்தான்குளம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர், வணிகர்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கணும் என்ற கோட்பாட்டில் அவர் சாட்சியம் அளித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பெண் காவலரின் கணவர் செய்தியாளருக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
அதில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் குறித்து…:
* சம்பவ நாளன்று 10 மணியளவில் தொலைபேசியில் பேசிய போது, தந்தை, மகன் இருவரையும் சக காவலர்கள் அடித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.
* ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ், தண்ணீர் கேட்டதாக எனது மனைவி வருத்தத்துடன் கூறினார்.
* உயிரிழப்பு காவலறிந்து எனது மனைவி மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார்
* இந்த சம்பவத்தின்போது பணியில் இருந்ததால், விசாரணையில் தனக்கு பிரச்சனை வரும் எனக்கூறினார்
* எனது மனைவிக்கு தைரியம் கூறி அழைத்துச் சென்றேன்
* எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாதுகாப்பு கேட்டும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியில் பெண் காவலரின் கணவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் பல அதிர்ச்சி தரும் திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி உள்ளது.