ஏடிஎம்-ல் ரூ.5,000க்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அமைத்த குழு பரிந்துரை செய்துள்ள விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களின் பண தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஆங்காங்கே ஏடிஎம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க பல வங்கிகள் ஏடிஎம் பயன்பாட்டை உபயோகப்படுத்த வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி வருகின்றன. இந்த ஏடிஎம்களில் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் பணம் எடுப்போருக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் அந்தந்த வங்கி ஏடிஎம்-களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்றும், மற்ற வங்கிகளில் குறிப்பிட்ட தடவைகள் மட்டுமே பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டது.
அதற்கு மேல் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி ஒரு குழுவை அமைத்து ஏடிஎம் கட்டணங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த குழு பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் தாக்கல் செய்த நிலையில், அதன் விபரங்கள் இன்னும் வெளியாக வில்லை. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர் காந்த் என்பவர், தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ், ரிசர்வ் வங்கி குழு பரிந்துரைத்த விபரங்களை கோரியுள்ளார்.
அந்த விபரங்களை ரிசர்வ் வங்கி தற்போது அளித்துள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்துள்ள அறிக்கையில் ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் உச்சவரம்பை ரூ.5000 ஆக மாற்ற வேண்டும் என்றும், அதற்கு மேல் எடுப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கவும் ஆலோசனை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அந்த அறிக்கையில், ‘நகர்புறங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் வங்கி ஏடிஎம்களில் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணத்தில் 16% உயர்த்தலாம். 10 லட்சத்துக்குக் குறைவானோர் வசிக்கும் நகரங்களுக்கு 24% கட்டண உயர்வு செய்யலாம். அதாவது பணப் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2க்கு பதில் ரூ.17 ஆகக் கட்டணம் வசூலிக்கலாம். பணமில்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.5-லிருந்து ரூ.7 ஆக கட்டணம் வசூலிக்கலாம்’ என்று பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.