கொரோனா வைரஸால் உலகளவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்தியாவும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தலாம் என தெரிவித்தது.
இதனை தொடர்ந்து இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இந்த மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் கொரோனா நோயாளிகள் உடல்நிலை மிகவும் மோசமடைவதாகவும் , இது பல பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாகவும் பல்வேறு ஆய்வுகள் தெரிவித்தன.
அதனால் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டது.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைக்க தவறியதால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் ஹெச்.ஐ.வி மருந்தான லோபினாவிர் , ரிடோனாவிர் ஆகியவற்றை கொரோனா நோயாளிகளுக்கு அளித்து பரிசோதனை செய்வதை உலக சுகாதார அமைப்பு நிறுத்தியுள்ளது.
இந்த மருந்துகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதில் சிறப்பாக செயல்படவில்லை என இடைக்கால சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நோயாளிகள் அல்லது நோய்த்தடுப்பு மருந்துகளாக இதனை பயன்படுத்தும் ஆய்வுகளை இந்த முடிவு பாதிக்காது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.