அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் மேடையில் பங்கேற்ற ராமர் கோயில் அறக்கட்டளை தலைமை நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 5-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் நிறுவுவதற்கான பூமி பூஜையானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை சடங்குகள் நடைபெற்றன.
பூமி பூஜை நிகழ்வில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பூஜையின் முடிவில் 40 கிலோ வெள்ளி செங்கலை நிறுவி, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
மேலும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சாமியார்கள், விஐபி.க்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் மேடையில் பங்கேற்றிருந்த ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸூக்கு தற்போது கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மேடையில் பிரதமர் மோடிக்கு மிக அருகாமையில் நின்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.