கொரோனா அதிகரித்து வரும் சூழலில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே தனிநபர் நகர்வு, போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் என்பது கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் 40,000திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

குஜராத்தில் தியேட்டர்கள் செயல்படுவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ.பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஏற்கனவே இருக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான தனிநபர் நகர் மற்றும் போக்குவரத்திற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கக்கூடாது.

பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கண்டிப்பாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

70 சதவீதம் அளவுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டம் ஆகிய ரீதியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் அனைவரும் முகக்கவசம் அணிகிறார்களா? சமூக இடைவெளி முழுமையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாவிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே