இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 85 லட்சத்தைக் கடந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 78 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் புதிதாக 45 ஆயிரத்து 674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 85 லட்சத்து 7 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஆறுதல் தரும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 78 லட்சத்து 68 ஆயிரத்து 968 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 665 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6.02 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து 10-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 559 பேர் உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 150 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் 58 பேர், டெல்லியில் 79 பேர், சத்தீஸ்கர், கர்நாடகாவில் தலா 22 பேர், தமிழகம், உத்தரப் பிரதேசத்தில் தலா 25 பேர், கேரளாவில் 28 பேர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 11 கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 791 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 94 ஆயிரத்து 487 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.
செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.