சென்னை: சிறப்பான சமூக செயல்பாடுகள், சாதனைகள் படைத்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பாடுகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அந்த வகையில், இந்தாண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அதன்படி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது. துணிவு,சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது.
முதல்வரின் சிறப்பு விருதை உலக சுகாதார நிறுவன முதன்மை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் பெற்றார். கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டது
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது. மகளிர் நலனுக்காக உழைத்தவர்களுக்கான விருது 2 பேருக்கும், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது 7 பேருக்கும், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு 27 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
சிறந்த மாநகராட்சி விருது வேலூர், சிறந்த நகராட்சிகள் விருது விழுப்புரம், கரூர், கூத்தநல்லூர், சிறந்த பேரூராட்சிகள் சேலம் மாவட்டம் வனவாசி, வீரபாண்டி, மதுக்கரை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.