பாசன வசதிக்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு அணையைத் திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 24 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்கள் பாசன வசதி பெறும் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில் தற்போது 101.10 அடி நீர் உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து ஆக.14ந்தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
120 நாட்களுக்கு திறக்கப்படும் 23,846,40 மில்லியன் கனஅடி நீரால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ளார். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தற்போது, அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் அணைக்கு வரும் நீர்வரத்தை பவானிசாகர் அணைப்பிரிவு உதவி பொறியாளர் சிங்காரவடிவேலு தலைமையில் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.