சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்குத் தடை கோரிய மனுவுக்கு, நாளைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு அது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது
இந்த நிலையில், மீனவ அமைப்பு சார்பாக, கே.ஆர் செல்வராஜ் குமார், மீனவர் நல சங்கம் அமைப்பின் தலைவர் தியாகராஜன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, 11.04.2020 இல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல்,
வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கக் கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான மேல் நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்” என கோரியுள்ளார்.
இந்த மனு இன்று (ஆக.6) நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதை சுட்டிக்காட்டி வரைவு அறிக்கை நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு (ஆக.7) ஒத்திவைத்து, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.