கடனை திருப்பி செலுத்த நிதி நிறுவனங்கள் எவ்வளவு அவகாசம் தரவேண்டும்? – விதிகளும் தெளிவும்..!!

கடன் தொகையை திருப்பி கொடுக்க நிதி நிறுவனங்கள் நுகர்வோருக்கு எவ்வளவு அவகாசம் கொடுக்க வேண்டும், நகைகளை அபகரிக்கலாமா போன்ற கேள்விகளுக்கு அரசின் விதிகள் என்ன சொல்கிறது என்பது பற்றி, இக்கட்டுரை வழியாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

நுகர்வோர் ஆர்வலர் சோமசுந்தரம் இதுபற்றி கூறுகையில், “அன்றாட பொழுதை நகர்த்தவே நடுத்தர மற்றும் ஏழை மக்கள் நகைகளை அடமானம் வைத்தோ அல்லது கந்துவட்டிக்கு கடன் வாங்கியோ வாழ்வாதாரத்தை நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 57%-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊரடங்கு நாட்களில் வங்கி மூலமாகவோ அல்லது தனியார் நிதி நிறுவனங்கள் மூலமாக கடன் பெற்றுள்ளதாக கன்ஸ்யுமர் பிரமீட் ஹவுஸ்ஹோல்டு சர்வே (Consumer Pyramids Household Survey – CPHS) என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. விரைவாக பணம் கிடைக்கும் என்பதாலும், அசல் தொகை அதிகம் என்பதாலும் தனியார் நிதி நிறுவனங்களிலும், சில அங்கரிக்கப்படாத அடகு கடைகளிலும்தான் மக்கள் கடன் வாங்குகிறார்கள்.

ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில், வருமானம் இழந்துள்ளதால் வட்டி பணமே கட்ட முடியாத நிலைக்கு பாமர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தனியார் அடகு நிறுவனங்கள் பணம் கட்ட முடியாதவர்கள் நகைகளை ஜப்தி செய்து வருகிறார்கள். அதில் பல நிதி நிறுவனங்களும், அடகு கடைக்காரர்களும் தமிழ்நாடு பணம் கொடுப்பவர்கள் சட்டம் – 1957-ஐ கடைபிடிப்பதில்லை” என்று கூறுகிறார்.

மேலும் பேசுகையில், “பணம் கொடுத்தல் வாங்கல் விதிகளை நெறிமுறைப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு பணம் கொடுப்பவர்கள் சட்டம் 1957ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதில் ஒருவர் வட்டி தொழில், நகை அடகு தொழிலில் ஈடுபடுவதற்கே நீண்ட வழிமுறைகள் உள்ளன. வட்டி தொழிலில் ஈடுபடுவோர் தங்கள் தொழில் முகவரி, விபரங்களை தாசில்தார், காவல்துறை ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை தாசில்தார், சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள், வட்டி விடுபவர்கள் கணக்கு வழக்குகளை சரி பார்க்க வேண்டும். நகை கடன் வாங்கியவர்கள் பணம் திரும்ப செலுத்த முடியவில்லை எனில் சம்மந்தப்பட்ட நிறுவனம் கடன் வாங்கியவருக்கு ஒரு நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அதற்கு பதில் கொடுக்கவில்லை எனில் காவல்துறையின் அனுமதியுடன் கடன் வாங்கியோரின் அடமான பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என ‘மணி லெண்டர்ஸ் ஆக்ட் 1957 கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லை. இந்த சட்டத்தின் படி அசல் தொகையில் 9 முதல் 12 % மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 14 முதல் 20 % வரை வசூலிக்கிறார்கள்.

இதுவே அங்கீகரிக்கப்படாத நிறுவனமோ, வட்டிக்காரர்களோ என்றால் மீட்டர் வட்டி, கந்து வட்டி, பிளைட் வட்டி என சுரண்டல் உச்சம் அடைகிறது. 2017ம் வருடம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒருவர் தீக்குளித்த சம்பவத்திற்கு பிறகு தான், கந்துவட்டி குறித்த சட்டங்களை அரசு அதிகாரிகளே திறந்து பார்த்து வருகிறார்கள். கடந்த 2 நவம்பர் 2020ல் அதிகமாக வட்டி பணம் வாங்கிய நபர்கள் மீதும், நிறுவனங்கள் மீதும் 10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கைகள் 2021ல் தொடரவில்லை. வட்டி பணம் அதிகமாக தான் வசூலிக்கிறார்கள்.

சில இடங்களில் குண்டர்கள் போல மிரட்டி பணம் வாங்குகிறார்கள். தனியார் நிதி நிறுவனங்களில் பெரும்பாலும் 20000 முதல் 40000 பேர் பணி புரிகிறார்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற காரணத்தை பிரதானமாக வைத்து கொண்டு விதிகளை மீறி நுகர்வோர் நகைகளை ஜப்தி செய்கிறார்கள். நகை கடன் வாங்கியவர்கள் பணம் திரும்ப செலுத்த முடியவில்லை எனில் சம்மந்தப்பட்ட நிறுவனம் கடன் வாங்கியவருக்கு ஒரு நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அதற்கு பதில் கொடுக்கவில்லை எனில் காவல்துறையின் அனுமதியுடன் கடன் வாங்கியோரின் அடமான பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என ‘மணி லெண்டர்ஸ் ஆக்ட் 1957 கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லை.

இந்த சட்டத்தின் படி அசல் தொகையில் 9 முதல் 12% மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் 14 முதல் 20% வரை வசூலிக்கிறார்கள். இதுவே அங்கீகரிக்கப்படாத நிறுவனமோ, வட்டிக்காரர்களோ என்றால் மீட்டர் வட்டி, கந்து வட்டி, பிளைட் வட்டி என சுரண்டல் உச்சம் அடைகிறது. மக்கள் மீது தான் அதிக குறை சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்க பட்ட வங்கி, தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் என ஒவ்வொருவரும் நகைகளுக்கு ஓவ்வொரு வட்டி வகுத்துள்ளனர். இந்த நிறுவனங்களில் கடன் பெற வேண்டும் என்றால் அதற்கான முறைகள் உள்ளன.

ஆவணங்கள் தருதல், வங்கியின் உறுப்பினர் ஆகுதல், குறைந்த பட்ச நாட்களில் இணைந்த பிறகு கடன் வழங்குதல் போன்றவற்றை காரணம் காட்டி பணம் கொடுக்க தட்டி கழிக்கிறார்கள். அதனால் மக்கள் கந்துவட்டி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களை நாடுகிறார்கள். கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் அதிக பணம் வட்டிக்கு விடும் நிறுவனங்களுக்கும், சட்டத்தை மீறுபவர்களுக்கும் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இது போன்ற நடவடிக்கைகள் இந்த வருடம் தொடரவில்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை தாசில்தார்கள் நிதி நிறுவனம், அடகு கடைகள் வரவு செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டும் என்கிற விதி சட்டத்தில் உள்ளது, ஆனால் நடைமுறையில் அதெல்லாம் கண்காணிக்க படுவதில்லை” என்றார் அவர்.

ஊரடங்கு காலத்தில் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி அதிக தொகை வட்டிக்கு விடுவதையும், நுகர்வாளர்கள் பொருட்களையோ, சொத்துகளையோ அபகரிப்பதை அரசு தடுக்க வேண்டும், விதிகளை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்பதே இவரைப் போன்ற நுகர்வோர் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே