டெல்லிக்கு வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, “நீங்கள் இந்தியனா?” என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் அதிகாரி கேட்ட நிகழ்வு, சர்ச்சையாகியிருக்கிறது.
திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தான் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், இன்று விமான நிலையத்தில் எனக்கு இந்தி தெரியாததால் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டேன்.
ஆனால், அந்த அதிகாரியோ ‘நீங்கள் இந்தியர் தானே’ என்று கேட்டார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயம் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கனிமொழி எம்பியின் ட்விட்டை ரீவிட் செய்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
விமானநிலையங்களில் எதிரில் இருப்பவருக்கு இந்தி தெரியுமா என்றுகூட கேட்காமல் அல்லது தெரிந்துகொள்ளாமல் அதிகாரிகள் இந்தியில் பேசத் தொடங்குகிறார்கள் என்பது பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு.
இன்னொரு பக்கம் புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படுவதாகக் கண்டனக் குரல்கள் கடுமையாகக் கேட்கின்றன.
இந்நிலையில் கனிமொழியின் இந்த ட்விட் இந்தி திணிப்பு குறித்த உரையாடலை சமூக ஊடகங்களில் தொடங்கி வைத்துள்ளது.