இராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள தினைக் குளம் கிராமத்திலுள்ள அரசு மதுபானக் கடையை, ஊழியர்கள் காவல்துறை பாதுகாப்போடு இன்று காலை திறக்க முயன்றனர்.
அப்போது திடீரென சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கடைக்கு முன் குவிந்தனர். அவர்கள் கடையை திறக்க கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், கூச்சலிடும் கடையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆத்திரம் அடைந்த மக்கள் கடையை திறந்தால் அடித்து நொறுக்குவோம் என பெண்கள் ஆவேசமாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
குடியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இருகரம் கூப்பி கைகளை கும்பிட்டு அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க திறக்கக் கூடாது, திறந்தால் எங்கள் குடும்பம் நடுதெருவிற்கு வந்துவிடும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
டாஸ்மாக் கடைகளை திறக்க திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, தங்களது வீடுகள் முன்பு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்புச் சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கமுதியில் உள்ள வீட்டிலும், மாநில தீர்மானக்குழு தலைவர் திவாகரன் பரமக்குடியில் உள்ள வீட்டிலும், முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் ராமநாதபுரம் வீட்டிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று கட்சி நிர்வாகிகள் தங்களது வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி தனது வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
முதுகுளத்தூரில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.முகம்மது தலைமையில், மாவட்ட பொருளாளர் வாவா ராவுத்தர் உள்ளிட்டோர் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை முடிவில் மதுபானக்கடை இழுத்து மூடப்பட்டது.