30 நொடிகளில் கொரோனாவை பரிசோதிக்கும் இஸ்ரேல் விஞ்ஞானிகளின் 4 தொழில் நுட்பங்கள் டில்லியில் பரிசோதிக்கப்பட உள்ளன.
கொரோனாவை உறுதிப்படுத்த உலகின் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் பல விதமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் மிக விரைவாக கொரோனாவை பரிசோதிக்கும் நான்கு தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து உள்ளனர்.
இஸ்ரேல் விஞ்ஞானிகள் டெராஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்காப்பி தொழில் நுட்பம், ஐசோதெர்மல் டெஸ்ட், அமினோஆசிட் முறை, பேச்சு அடிப்படையிலான பரிசோதனை என நான்கு தொழில் நுட்பங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த 4 தொழில்நுட்பங்களும் டில்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் இரு முறைகளில் பரிசோதிக்கப்பட உள்ளனர்.
முதலில் ஆர்டி-பிசிஆர் முறையிலும், இரண்டாவதாக இஸ்ரேல் தொழில்நுட்ப அடிப்படையில் ப்ரீதேலைசர் கருவியை பயன்படுத்தி பரிசோதனை நடத்தப்படும்.
இது குறித்து விஞ்ஞானி கே.விஜயராகவன் பேசுகையில், ‘ இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் கெமிக்கல் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.
ஆனால் மற்ற முறைகளில் கெமிக்கல் மற்றும் ரிஏஜென்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பேச்சை அடிப்படையாக கொண்ட கருவி ப்ரீதலைசர் முன் நோயாளி ஊதினாலோ அல்லது பேசினாலோ மாதிரி சேகரிக்கப்பட்டு உடனே முடிவுகளை அறிவிக்கக்கூடிய தொழில்நுட்பம் இது’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இப்பரிசோதனை முறைகள் வெற்றியடையும் பட்சத்தில் கொரோனா பரிசோதனைகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் நடத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்