அண்ணன்-தம்பி பிரச்சனை என்று கட்சிக்குள் பேசியதை திரித்து கூறுகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குள் இருப்பது பற்றி அமைச்சர் வேலுமணி பேசியதை திரித்துக் கூறுகிறார்கள்.
இளவரசி, சசிகலா சொத்துக்கள் பறிமுதல் நீதிமன்ற உத்தரவுப்படிதானே தவிர, அரசுக்கும் சம்பந்தமில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது.
எள்முனை அளவுக்கு கூட அதிமுகவில் பிளவு இல்லை. ஒற்றுமையாகவே உள்ளோம். கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் நீக்கம் செய்யப்படுவது எல்லா கட்சியிலும் உள்ள நடைமுறைதான்.
அதிமுக வேறு, அமமுக வேறு, டிடிவி தினகரனை ஏன் அதிமுகவில் சேர்க்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய முதல்வர் பழனிசாமி, கட்சியில் இல்லாதவர்களைப் பற்றி நாங்கள் ஏன் பேச வேண்டும் என்றார்.
அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய விருப்பப்பட்டால் கட்சி முடிவு செய்யும் என்றார்.
நாம் செல்லும் இடங்களில் மக்கள் எழுச்சியுடன் கூடுகின்றனர்; மீண்டும் அதிமுக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்கும். அரசு ஊழியர்களுக்கு அதிகமான சலுகை அதிமுக ஆட்சியில் தான் கிடைத்துள்ளது.
ஜனநாயக நாட்டில் யாரும் அடக்குமுறையில் ஈடுபடவில்லை என்றார். அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன்;
எதையும் சந்திக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.
பாமக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை; பேச்சுவார்த்தைக்கு பின் தொகுதிப்பங்கீடு பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.