‘பரிவுள்ள ஆளுமை’ என்பது தமிழக அரசின் முக்கியக் கோட்பாடாகும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.

கூட்டத் தொடரை தொடங்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில், கரோனா சூழலில் மிகவும் இக்கட்டான காலத்தில் தமிழக சட்டப்போரவைக் கூட்டம் கூடியிருக்கிறது.

கரோனா பொதுமுடக்கக் காலத்திலும் கூட தமிழகத்துக்கு ரூ.60,674 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2000 சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருப்பது தொலைநோக்குத் திட்டமாக அமைந்துள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் சமூக நீதி மற்றும் சம நீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே 1100 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைத்து அரசின் சேவைகைளைப் பெறலாம்.

முதலமைச்சரின் உதவி மையம் எனும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

சட்டப்பேரவைத் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கும், எந்த வகையிலான சவால்களை எதிர்கொள்ளவும் தமிழக காவல்துறை தயாராக உள்ளது.

நாட்டிலேயே அதிக கரோனா பரிசோதனைகளை மேற்கொண்ட மாநிலம் தமிழகம்தான்.

பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய தமிழக காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

தமிழ் மொழியின் பெருமையை வளர்ப்பதே இந்த அரசின் முதன்மைக் குறிக்கோளாக உள்ளது. சேலம் தலைவாசலில் ஒருங்கிணைந் கால்நடை ஆராய்ச்சி மையம் விரைவில் செயல்படத் தொடங்கும்.

கரோனா தொற்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ரூ.13,208 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்துவதில், ஆர்டி-பிசிஆர் சோதனையை முறையாக பயன்படுத்திய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

7.5% இட ஒதுக்கீடு மூலம், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த 435 மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பு கிட்டியுள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றும் இலக்கை நோக்கி தமிழக அரசு வெற்றி நடை போடுகிறது.

தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடரும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே